மீண்டும் Me Too - வைரமுத்துவை சாடிய பாடகி சின்மயி..! - கமல்ஹாசனுக்கும் நறுக் கேள்வி..!


Me Too என்ற ஹாஸ்டேக்கின் மூலம் உலகம் முழுதும் உள்ள பெண்கள், நடிகைகள், பெண் பிரபலங்கள பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை கட்டவிழ்த்து வந்தனர். 

இதில், பாடல் ஆசிரியர் வைரமுத்துவால் தனக்கு ஏற்பட்ட பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்கள் குறித்து வெளிப்படையாக பகிர்ந்தார் பாடகி சின்மயி. இது தமிழ் சினிமா வட்டாரத்தில் புயலை கிளப்பியது. சிலர் அவரை அவதூறாக பேசினர். ஆனால், ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டு வைத்து வைரமுத்துவின் பெயரை களங்கப்படுத்துகிறார் என்று பலரும் வைரமுத்துவை ஆதரித்தனர். 

சமீபத்தில், நடிகர் கமல்ஹாசன், தனது அலுவலகத்தில் பாலசந்தரின் சிலையை திறந்துள்ளார். இந்த விழாவில் ரஜினிகாந்த், மணிரத்னம் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களுடன் வைரமுத்துவும் பங்கேற்றார். 

இந்த விழாவில் பங்கேற்ற வைரமுத்துவை பார்த்து காண்டான சின்மயி " பாலியல் ரீதியாக குற்றம் சாட்டப்பட்ட வரை எதற்காக இந்த விழாவிற்கு அழைத்தார்கள் " என சின்மயி நடிகர் கமல்ஹானுக்கு மறைமுகமாக கேள்வி எழுப்பி உள்ளார். 

இது குறித்து தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது, நான் இங்கே குறிப்பிடுவது வைரமுத்துவை. ஒரு மனிதன் பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுக்கு ஆளானால் அவனது வாழ்க்கையே அழிந்துவிடும். முகத்தை வெளியே கூட தலைக்காட்ட முடியாது. 

அப்படிப்பட்ட குற்றவாளியான வைரமுத்து தொடர்ந்து இந்த ஆண்டு முழுவதும் பல திமுக நிகழ்வுகள், ஐ.ஏ.எஸ் அதிகாரி பயிற்சி அகாடமி நிகழ்வுகள், தமிழ் மொழி நிகழ்வுகள், புத்தக வெளியீடுகள் மற்றும் தொழில் நிகழ்வுகளில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார். அவருக்கு எதுவும் நடக்கவில்லை. 

ஆனால், அவரால் பாதிக்கப்பட்ட பெண்ணான என்னை தடை செய்து விட்டார்கள். தமிழ் சினிமாவில் உள்ள பெரியவர்களால் எனக்கு வழங்கப்பட்ட நீதி என பதிவிட்டுள்ளார். 

மேலும் ‛‛பாலியல் குற்றவாளிகள் பொதுமேடையில் தங்கள் இமேஜை எப்படி தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள். இவர்களில் சில அரசியல்வாதிகளும் அடக்கம். இவர்களை நினைத்தால் பயமாக உள்ளது'' என கூறியுள்ளார் சின்மயி.