சின்னத்திரை புகழ் சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில் அவரது முகத்தில் இருக்கும் காயங்களை சுட்டிக்காட்டி இது கொலையாக கூட இருக்கலாம் என டுவிட்டரில் பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர். இதனால் சித்ரா விவகாரம் டிரெண்டிங் ஆனது.
சென்னையை சேர்ந்த சித்ரா, வீ.ஜே.வாக தனது பயணத்தை துவக்கினார். பல டிவிக்களில் தொகுப்பாளினியாக வலம் வந்தவர், பின்னர் சீரியல்களில் நடிக்க தொடங்கினார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' என்ற தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை ஈர்த்தார்.
இந்நிலையில் நேற்று(டிச.,08) இரவு படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னையை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலுக்கு திரும்பிய சித்ரா, அதிகாலை நேரத்தில், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சித்ராவின் மறைவை பொருத்துக்கொள்ள முடியாத அவரது ரசிகர்கள் கணவர் ஹேமந்த்தை நோக்கி பல கேள்விகளை சமூக வலைத்தளங்கள் வாயிலாக எழுப்பி வருகிறார்கள். இந்நிலையில் திருமணம் குறித்த குழப்பத்தில் சித்ரா இருந்ததாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம் சித்ராவுக்கும், ஹேமந்துக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.