விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் சித்ரா தொகுப்பாளினியாக இருந்து வந்தவர். தொகுப்பாளினி, நடிகை, நடனம், மாடலிங் என பல திறமைகளை சித்ரா கொண்டிருந்தார்.
1992ம் ஆண்டு மே 2ஆம் தேதி சென்னையில் பிறந்த சித்ரா, 2013ம் ஆண்டு மக்கள் தொலைக்காட்சியில் சட்டம் சொல்வது என்ன நிகழ்ச்சியில் முதன் முதலாக தொகுப்பாளினியாக அறிமுகமானார்.
அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா, பெரிய பாப்பா என்ற தொடரில் நடித்து வந்தார். திரைப்படங்களிலும் நடித்துள்ள சித்ரா, தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சியிலும் அசத்தியுள்ளார். தற்போது இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில்தான், சித்ராவின் திருமணம் குறித்த பேச்சு பரவியது. கடந்த ஆகஸ்ட் மாதம் நிச்சியதார்த்தமும் நடந்து முடிந்தது. சித்ரா திருமணம் செய்துகொள்ள இருந்தவர் பெயர் ஹேமந்த் ரவி.
விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக கூறியிருந்த சித்ரா, இன்று அதிகாலை திடிரென தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வருங்கால கணவருடன் ஓட்டல் அறையில் தங்கியிருந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டிருந்திருக்கிறார்.
இந்நிலையில், நள்ளிரவில் படப்பிடிப்பு முடிந்து அறைக்கு திரும்பிய சித்ரா, அதிகாலை வாக்கில் குளிக்கப்போவதாகவும், அறைக்கு வெளியே இருக்குமாறும் ஹேமந்த்திடம் கூறியிருக்கிறார்.
அவரும் வெளியில் காத்திருக்கிறார். ஆனால், வெகுநேரமாகியும் சித்ரா கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த ஹேமந்த், ஓட்டல் நிர்வாகிகளிடம் மாற்று சாவி பெற்று கதவை திறந்துள்ளார்.
அங்கு பேரதிர்ச்சியாக சித்ரா தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார் ஹேமந்த். உடனே காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
தான் சார்ந்துள்ள துறை ரீதியாக மன அழுத்தமாக, வருங்கால கணவருடன் ஏதேனும் பிரச்னையா, அல்லது வேறு ஏதேனும் காரணமா உள்ளிட்ட கோணங்களில் போலீசர விசாரித்து வருகின்றனர்.இதனிடையே, சித்ராவின் மறைவுக்கு சின்னத்திரை கலைஞர்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தற்கொலை நடந்த போது சித்ராவுடன் இருந்தார் என்பதால் அவரது வருங்கால கணவர் ஹேமந்த் மீது பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. என்ன நடந்தது என்பது இவருக்கு மட்டும் தான் தெரியும். அவரை நன்கு விசாரிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
இந்நிலையில், சித்ராவுக்கு எனக்கும் இரண்டு மாதம் முன்பே திருமணம் நடந்துவிட்டது என்று ஹேமந்த் கூறியுள்ளார். விசாரணையில் சித்ராவுக்கும், தனக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்பே பதிவு திருமணம் நடந்துவிட்டதாகவும், சித்ரா தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் ஹேம்நாத் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் முறையான ஆவணங்களை காண்பித்தால் மட்டுமே திருமணம் தொடர்பான தகவலை உறுதி செய்ய முடியும் என போலீசார் தெரிவித்துள்ளனர். சித்ராவின் மரணம் கொலையா? தற்கொலையா? முகத்தில் காயம் ஏற்பட்டது ஏன்? தற்கொலை என்றால் காரணம் என்ன? குடும்ப பிரச்னையா? வேறு ஏதேனும் காரணமா? என்ற பல கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
நிச்சயதார்த்தம் தான் முடிந்துள்ளது என்றிருந்த ரசிகர்களுக்கு இந்த தகவல் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக உள்ளது.
இந்த தற்கொலையில் இருக்கும் மர்மம் தான் என்ன என்று பலரும் குழம்பி போயுள்ளனர். இன்னும் சற்று நேரத்தில் பிரேதபரிசோதனை அறிக்கை வெளியாகும் என தெரிகின்றது.
Tags
VJ Chithu