மட்டர் பன்னீர்/ பட்டாணி பன்னீர் க்ரேவீ செய்யும் முறை

உங்கள் வீட்டில் உள்ளோர் பன்னீரை விரும்பி சாப்பிடுவார்களா? பன்னீரை எப்படி செய்தாலும் பிடிக்குமா? இன்று உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்வதாக இருந்தால், பன்னீருடன் மட்டர்/பச்சை பட்டாணி சேர்த்து கிரேவி செய்யுங்கள். இந்த கிரேவி செய்வது மிகவும் சுலபம். பேச்சுலர்கள் கூட எளிதாக செய்து விடலாம்,மேலும் இது அனைவருமே விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.உங்களுக்கு மட்டர் பன்னீர் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மட்டர் பன்னீர் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பன்னீர் – 200 கிராம்
* பட்டாணி/மட்டர் – 1 கப்
* பிரஷ் க்ரீம் – 2-3 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் – 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா – 1 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி – சிறிது
* உப்பு – சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு:

* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
* நெய் – 1 டீஸ்பூன்
* சீரகம் – 1 டீஸ்பூன்

அரைப்பதற்கு :

* வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)

* தக்காளி – 4 (நறுக்கியது)
* கிராம்பு – 1
* முந்திரி – 10
* ஏலக்காய் – 1
* பட்டை – 1 இன்ச்
* மிளகு – 10

---- Advertisement ----

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் அரைப்பதற்கு கொடுத்துள்ள வெங்காயம், தக்காளி, முந்திரி, பட்டை, ஏலக்காய், கிராம்பு மற்றும் மிளகு ஆகியவற்றைப் போட்டு, நீர் சேர்க்காமல் நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும், சீரகத்தை சேர்த்து தாளித்து, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.

* பின்பு அதில் அரைத்த வெங்காய விழுதை சேர்த்து 1/2 கப் நீரை ஊற்றி பச்சை வாசனை போக 10-12 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.

* பிறகு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி, 2 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.

* பின் அதில் பச்சை பட்டாணி மற்றும் 1/4 கப் நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரைத் திறக்க வேண்டும்.

* பின்பு அந்த குக்கரை மீண்டும் அடுப்பில் வைத்து, பன்னீர் துண்டுகளை சேர்த்து 1 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.

* இறுதியாக அதில் பிரஷ் க்ரீம், கரம் மசாலா, கொத்தமல்லி இலைகளை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான மட்டர் பன்னீர் தயார்.

 

---- Advertisement ----