நயன்தாராவின் 75வது படம்; புதுமுக இயக்குனருக்கு வாய்ப்பு

தமிழ் சினிமாவில், லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் நயன்தாரா. சர்ச்சைகளுக்கும், பரபரப்புக்கும் பெயர் பெற்ற சில நடிகைகளில் இவரும் முக்கியமானவர். அதேவேளையில், தனக்கு ஏற்படும் பிரச்னைகளை எளிதில் கடந்துவரும் வெற்றியாளராகவும் இவர் இருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2005ல், ஹரி இயக்கத்தில் ஐயா படத்தில், அறிமுகமான நயன்தாரா, அடுத்தடுத்த படங்களில் நடித்து, முன்னணி நாயகியாக உயர்ந்தார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாள படங்களிலும் நயன்தாரா முன்னணி நாயகிகளில் ஒருவராக உள்ளார்.

கடந்தாண்டில், காத்துவாக்குல ரெண்டு காதல், கனெக்ட், ஓ2 ஆகிய தமிழ் படங்களிலும், காட்பாதர் என்ற தெலுங்கு படத்திலும், கோல்டு என்ற மலையாள படத்திலும் நடித்திருந்தார். இந்தியில், இயக்குநர் அட்லி இயக்கத்தில் ஜவான் என்ற படத்தில், ஷாருக்கான் ஜோடியாக நடித்திருக்கிறார். மேலும், ஜெயம் ரவி ஹீரோவாக நடித்துள்ள, இறைவன் படத்தில், நயன்தாரா ஜோடியாக நடித்துள்ளார். அந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என 74 படங்களில் நடித்துள்ள நயன்தாரா, அடுத்து தனது 75வது படத்தில் நடிக்கிறார். புதுமுக இயக்குநர் தினேஷ் கிருஷ்ணா என்பவர் இயக்கும் இந்த படத்துக்கு, இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. படப்பிடிப்பு துவங்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்குள், இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில், ராஜா ராணி படத்தில், நயன்தாராவுடன் நடித்த சத்யராஜ், மற்றும் ஜெய் ஆகியோரும் நடிக்க உள்ளனர். நயன்தாரா நடிக்க வந்து சில ஆண்டுகளே ஆனதாக தோன்றினாலும், அவர் நடிக்கவந்து, 18 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது குறிப்பிடத்தக்கது.

---- Advertisement ----

---- Advertisement ----