பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமல்ஹாசன், ஒவ்வொரு வார இறுதியிலும் போட்டியாளர்களிடையே உரையாடுவார். அந்த வாரத்தில் பிக்பாஸ் வீட்டில் நடந்த நிகழ்வுகளின் அடிப்படையில் கமல்ஹாசனின் உரையாடல் அமையும்.
அந்த வகையில் கடந்த வாரம் சனிக்கிழமை ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை மீராமிதுன் சேரன் மீது சுமத்திய வீண்பழி குறித்து கமல்ஹாசன் பேசினார். டாஸ்க்கின் போது இயக்குநர் சேரன் தன்னை தவறாக பிடித்து இழுத்ததாக மீராமிதுன் கூறியதை அடுத்து அவருக்கான குறும்படமும் ஒளிபரப்பானது.
தொடர்ந்து மீராமிதுனிடம் பேசிய கமல்ஹாசன், அரசுப் பேருந்துகளில் செல்லும் பெண்களின் நிலை குறித்தும் பேசினார். பெரும்பாலானோர் பணிக்குச் செல்லும் அவசரத்தில் கூட்டத்தில் முண்டியடித்து செல்கின்றனர். அதில் வேண்டுமென்றே பெண்களை உரச வேண்டும் என்ற எண்ணத்தில் வருபவர்களும் உண்டு என்று கமல்ஹாசன் கூற, தனது கையை உயர்த்தி ஆமோதித்தார் சரவணன்.
இதனை கேட்ட கமல்ஹாசன் அவர் அதையும் தாண்டி புனிதராகிவிட்டார் என்று கூறினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, நடிகர் சரவணன் பிக்பாஸ் வீட்டில் இருந்த படியே மன்னிப்பும் கேட்டார்.
ஆனால், இன்று நடிகர் சரவணனை பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுமாறு பிக்பாஸ் கட்டளையிட்டு வெளியே அனுப்பி விட்டார். இது ரசிகர்களை அதிர்ச்சி ஆழ்த்தியுள்ளது.