அஜித்துடன் உன்னைத்தேடி படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானவர் மாளவிகா. ‘வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம்…’ என்ற பாடலில் நடனம் ஆடி பிரபலமானார்.
ரோஜா வனம், வெற்றி கொடி கட்டு, சந்திரமுகி, திருட்டு பயலே, குருவி, வியாபாரி, சபரி உள்பட பல முக்கிய படங்களில் நடித்துள்ளார். 10 வருடங்களுக்கு முன்பு சுமேஷ் என்பவரைத் திருமணம் செய்து சினிமாவை விட்டு விலகினார்.
மாளவிகாவுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். குடும்பத்துடன் மும்பையில் வசித்து வந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் படங்களில் நடிக்கத் தயாராகி உள்ளார். 2 கதைகள் கேட்டுள்ளார்.
இவற்றில் நடிக்க பேச்சு நடந்து வருகின்றது. மீண்டும் நடிப்பது குறித்து மாளவிகா கூறியதாவது, “தமிழில் நல்ல கதைகள் மற்றும் கதாபாத்திரங்களில் நடித்தேன். முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்தேன். இரசிகர்களும் என்மீது அன்பு காட்டினார்கள்.
வாளமீனு பாடல் எனக்கு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. திருமணத்துக்குப் பிறகு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தினேன். மீண்டும் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. இப்போது அதற்கான நேரம் வந்துள்ளது. புதிய படங்களில் நடிக்கக் கதை கேட்டு வருகிறேன். நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க முடிவு செய்துள்ளேன்” என்று கூறியுள்ளார். இது அவரது ரசிகர்களை குஷியாக்கியுள்ளது.