பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் நேற்று மும்பையில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 34. இளம் வயதில் நடிகர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நடிகர் சுஷாந்த் சிங் கடந்த 6 மாதங்களாக மனஅழுத்தத்துடன் இருந்தார் என்றும் கூறப்படுகிறது. சீரியிலில் நடித்து பிரபலமான சுஷாந்த் சிங் அதன்பின் பெரியத்திரைக்கு அறிமுகமானார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'எம்.எஸ்.தோனி தி அண்ட் டோல்டு ஸ்டோரி' படத்தில் நடித்ததன் மூலம் நாடு முழுவதும் பிரபலமானவர்.
நடிகர் சுஷாந்த் சிங்கின் மறைவிற்கு திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதனிடையே நடிகர் சுஷாந்த் சிங் மறைவு செய்தியை கேட்டு தோனி மிகவும் மனவேதனை அடைந்ததாக 'எம்.எஸ்.தோனி தி அண்ட்லோட் ஸ்டோரி' படத்தின் இயக்குனர் நீரஜ் பாண்டே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், நடிகர் சுஷாந்த் மரணம் குறித்த சோகமான செய்தியை தெரிவிக்க தோனிக்கு அழைத்ததாக கூறி உள்ளார். தோனியை தவிர அவருடைய இரண்டு நண்பர்கள் மிஹிர் திவாகர் மற்றும் அருண் பாண்டே ஆகியோரையும் அழைத்தேன்.
அவர்கள் இருவரும் இந்த செய்தியை கேட்டு திகைப்பில் ஆழ்ந்தனர். மஹி பாய் இந்தச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்து நொறுங்கிப்போனார். சிறிது நேரம் அவருக்கு பேச்சே வரவில்லை. நான் மஹி.. மஹி.. என்று அவரிடம் பேசினேன். ஆனால், அவர் பதில் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால், லைனில் தான் இருந்தார். மஹி இந்த அளவுக்கு வேதனைப்பட்டு நான் இதுவரை பார்த்ததே இல்லை” என்று நீரஜ் வேதனையுடன் தெரிவித்தார்.




