பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 34. இந்தி சின்னத்திரை தொடர்கள் மூலம் நடிப்புலகில் அறிமுகமானவர் சுஷாந்த்.
பிஹாரைச் சேர்ந்த இவர் 'தேஷ் மேன் ஹாய் மேரா தில்' என்ற தொடரில் முதன் முதலில் நடித்தார். பின் 2009-ம் ஆண்டு பவித்ர ரிஷ்தா என்ற தொடரின் மூலம் கவனம் பெற்றார். இந்தத் தொடர் அவருக்கு விருதையும் பெற்றுத்தந்தது.2013-ம் ஆண்டு, எழுத்தாளர் சேத்தன் பகத் எழுதிய 'த்ரீ மிஸ்டேக்ஸ் ஆஃப் மை லைஃப் புத்தகத்தின் திரைப்பட வடிவமான 'கை போ சே' (மூலம் நாயகனாக பாலிவுட்டில் அறிமுகமானார்.
தொடர்ந்து 'ஷுத் தேஸி ரொமான்ஸ்', 'டிடெக்டிவ் ப்யோம்கேஷ் பாக்ஷி' ஆகிய படங்கள் மூலம் பாலிவுட்டின் முக்கிய நடிகர்களில் ஒருவராக குறுகிய காலத்தில் வளர்ந்தார். ஆமிர்கானின் 'பிகே' படத்திலும் உறுதுணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
2016-ம் ஆண்டு, இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் 'எம்.எஸ்.தோனி தி அண்ட்லோட் ஸ்டோரி' திரைப்படம் இவரை மொழிகள் தாண்டி பிரபலமாக்கியது. ஆனால் உடனடியாக அடுத்தடுத்து படங்கள் ஒப்பந்தம் செய்யாமல் நிதானத்தையே கடைபிடித்து வந்தார்.
கடைசியாக இவர் நடித்து திரையரங்கில் வெளியான திரைப்படம் 'சிச்சோரே' (2019). இந்தப் படத்தின் விமர்சனங்கள் சுஷாந்தின் நடிப்பை பாராட்டியிருந்தன. 'தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ்' என்கிற ஆங்கில நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட 'தில் பெசாரா' என்ற படத்தில் சுஷாந்த் நாயகனாக நடித்திருந்தார். இந்தப் படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். மே 8ம் தேதி இந்தப் படம் வெளியாவதாக இருந்தது.
ஆனால கரோனா நெருக்கடி, ஊரடங்கைத் தொடர்ந்து இந்தப் படத்தின் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் சுஷாந்த் மும்பை பந்த்ராவில், தன் இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டுப் பணியாள் இவரது சடலத்தைப் பார்த்து காவல்துறைக்கு செய்தி கொடுத்துள்ளார்.
இவரது தற்கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. சுஷாந்தின் மறைவு நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் என பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ட்விட்டர் தளத்தில் எண்ணற்ற பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கெனவே இர்பான் கான், ரிஷிகபூரை இழந்து சோகத்தில் ஆழ்ந்துள்ள பாலிவுட் உலகம் தற்போது இவரைப்போன்ற ஒரு சிறுவயது நடிகரையும் இழந்து சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
ஒரு கோடி இன்ஸ்ட்கிராம்ஃபாலோவர்களை கொண்ட இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வாரத்திற்கு முன்பு சோகமான ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். "கண்ணீர் துளிகளில் கடந்த கால நினைவுகள் ஆவியாகின்றன. முடிவில்லாத கனவுகளில் புன்னகைகளும், விரைவான வாழ்க்கையையும் செதுக்கப்படுகின்றன. இந்த இரண்டுக்கும் நடுவே வாழக்கை நகர்கிறது" என்று கூறியுள்ளார்.



