பெப்பின் ஜார்ஜ் இயக்கத்தில் ரூபா நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் எமகாதகி.
பெண்களை மையப்படுத்தி அவ்வப்போது தமிழ் சினிமா படங்கள் வந்துகொண்டிருக்கும் வரிசையில், இந்த படம் எந்த விதத்தில் ரசிகர்களை கவர்ந்தது என்பதை விமர்சனத்தில் பார்க்கலாம்.
கதைக்களம்:
தஞ்சாவூர் கிராமத்தில் காப்பு கட்டு சடங்குடன் படம் தொடங்குகிறது. கதாநாயகி ரூபாவிற்கும் அவரது தந்தைக்கும் இடையே நடக்கும் சண்டையில் தந்தை ஓங்கி அறைய, ரூபா தற்கொலை செய்து கொள்கிறார்.
ரூபாவின் உடலை அடக்கம் செய்ய முயலும் போது, உடல் அசையாமல் கட்டிலோடு சேர்ந்து இறுகிவிடுகிறது. ரூபாவின் உடல் ஏன் அசைய மறுக்கிறது? உண்மையில் ரூபாவிற்கு என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்:
பேய் மற்றும் அமானுஷ்ய திரைப்படங்கள் பல வந்திருந்தாலும், ஒரு பெண் தனது இறப்பிற்கு தானே நீதி கேட்டு போராடும் கதையை தேர்ந்தெடுத்த இயக்குனரை பாராட்டலாம். அதுவும் இந்த காலகட்டத்திற்கு தேவையான ஒரு களத்தை கையாண்டதற்காகவே அவருக்கு சிறப்பு பாராட்டுக்கள்.
படத்தின் நாயகி ரூபா, பெரும்பகுதி படம் முழுவதும் பிணமாகவே அசையாமல் நடித்திருப்பது பாராட்டுக்குரியது. தமிழ் சினிமாவிற்கு கிடைத்த ஒரு நல்ல வரவு இவர் என்பதில் சந்தேகம் இல்லை.
ரூபாவை தாண்டி படத்தில் நம்மை கவர்வது அம்மாவாக நடித்த கீதா கைலாசம் தான். அவரது யதார்த்தமான நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.
படத்தின் முதல் பாதி காட்சிகள் விறுவிறுப்பாக சென்றாலும், இரண்டாம் பாதியில் வசனங்கள் அதிகமாக இருப்பதால் வேகம் சற்று குறைகிறது. வசனங்களை குறைத்து காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தால் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும்.
ஒரு வீட்டிற்குள்ளேயே நடக்கும் கதையை ஒளிப்பதிவாளர் மிகவும் சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளார். ஒளிப்பதிவு செய்த சபாஷை பாராட்டியே ஆக வேண்டும்.
இசையமைப்பாளர் ஜெசீன் பின்னணி இசையில் தன் பணியை சிறப்பாக செய்துள்ளார்.
ப்ளஸ்:
- வித்தியாசமான கதைக்களம்
- ரூபா மற்றும் கீதா கைலாசம் நடிப்பு
- ஒளிப்பதிவு மற்றும் இசை
மைன்ஸ்:
- இரண்டாம் பாதி திரைக்கதை வேகம் குறைவு
மொத்தத்தில், எமகாதகி - புதுமையான கதைக்களத்துடன் மரணத்திற்கு பின் நீதி கேட்டு போராடும் பெண்ணின் திகில் பயணம்!
Yamakaathaghi Tamizhakam Rating