சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில், 8 வயது சிறுமி ஒருவர் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போனார்.
அவரது குடும்பத்தினர் தேடியபோது, சிறுமியின் தோழி அளித்த தகவலின் பேரில், அப்பகுதியில் உதவி ஆய்வாளராக பணிபுரியும் ஒருவரின் வீட்டில் சிறுமி இருப்பது தெரியவந்தது.

குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தபோது, சிறுமி மயக்க நிலையில் கிடந்ததாகக் கூறப்படுகிறது. மீட்கப்பட்ட பின்னர், சிறுமி மயக்கம் தெளிந்து, உதவி ஆய்வாளர் தனக்கு மயக்க ஊசி செலுத்தி, பாலியல் துன்புறுத்தல் செய்ததாகக் குடும்பத்தினரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து, 2025 ஜூன் 29 இரவு, குடும்பத்தினர் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், புகார் பதிவு செய்யப்படவில்லை எனக் கூறி, உறவினர்கள் காவல் நிலையத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தைக்குப் பின், புகார் பதிவு செய்யப்பட்டு, வழக்கு ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. சிறுமி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதனிடையே, மீட்பின்போது இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு நடந்ததாகவும், சிறுமியின் தாத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்தது.
உதவி ஆய்வாளர், சிறுமியின் குடும்பத்தினர் தன்னை பழிவாங்குவதற்காக பொய் குற்றச்சாட்டு கூறுவதாகவும், சிறுமியை காப்பாற்றுவதற்காகவே தான் தலையிட்டதாகவும் விசாரணையில் கூறியுள்ளார்.
துணை ஆணையர் தலைமையில் நடக்கும் விசாரணையில், குற்றச்சாட்டு உறுதியானால், POCSO சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
English Summary: An 8-year-old girl in Chennai’s Nungambakkam was found unconscious at a sub-inspector’s house after going missing. She alleged sexual assault and sedation. A complaint was filed, initially ignored, leading to protests.
The case is under investigation at Thousand Lights Women’s Police Station, with medical examinations ongoing.