உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த ரூபி என்ற பெண், தன் கணவர் சுரேந்திரகுமார் காணாமல் போனதாக மே 26ஆம் தேதி போலீஸ் நிலையத்தில் கண்ணீர் விட்டு புகார் அளித்தார்.
அவர் கணவரின் புகைப்படத்தை கொடுத்து, “எப்படியாவது அவரை தேடி விடுங்கள்” என்று வேண்டினார். போலீசார் விசாரணையைத் தொடங்கினர். ரூபியும் தன் கணவரைத் தேடி போலீசாருடன் சேர்ந்து திரிந்தார்.

ஆனால் அப்பகுதி மக்கள், சுரேந்திரகுமார் மே 18ஆம் தேதியிலிருந்தே யாருக்கும் தெரியாமல் காணப்படவில்லை என்று தெரிவித்தனர். இந்த முரண்பாடு போலீசாரின் கவனத்தை ஈர்த்தது.
ரூபியின் பேச்சில் முன்னும் பின்னும் ஒத்துப்போகாத பல விவரங்கள் இருந்தன. இதனால் போலீசார் அவரை மேலும் தீவிரமாக விசாரிக்கத் தொடங்கினர்.

விசாரணை ஒரு கட்டத்தில் ரூபியின் வீட்டில் சோதனைக்கு வழிவகுத்தது. ஆரம்பத்தில் எந்த துப்பும் கிடைக்கவில்லை. போலீசார் வெளியேறத் தயாரான நிலையில், ஒரு போலீஸ்காரர் பாத்ரூமை ஒருமுறை பார்க்கலாம் என்று கூறினார்.

அங்கு தரையின் ஒரு பகுதி புதிதாக சிமெண்ட் பூசப்பட்டிருந்தது. சந்தேகம் எழுந்த போலீசார் அந்த இடத்தை தோண்டிப் பார்த்தனர். அங்கு சுரேந்திரகுமாரின் உடல் சிதைந்த நிலையில் கிடைத்தது.

உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

தம்பதியரின் பின்னணி குறித்து விசாரித்தபோது, சுரேந்திரகுமார் மது அடிமையாக இருந்ததாகவும், தினமும் மது அருந்தி வீடு திரும்பி ரூபியை அடித்து துன்புறுத்தியதாகவும், தினந்தோறும் விசித்திரமான முறையில் உடலுறவு கொள்ள சொல்லி கட்டாயப்படுத்தியதாகவும் தெரிய வந்தது. இதனால் அடிக்கடி தம்பதியரிடையே சண்டை ஏற்படும்.

ஒரு நாள் நடந்த கைகலப்பில், ஆத்திரமடைந்த ரூபி அவரை அடித்து கீழே தள்ளியதில், அவர் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பயந்து போன ரூபி, உடலை வீட்டுப் பாத்ரூமில் குழி தோண்டி புதைத்து மறைத்தார். பிறகு அவர் காணாமல் போனதாக நாடகம் ஆடி, போலீசிடம் புகார் அளித்து, 45 நாட்கள் தேடுதலில் கலந்து கொண்டார்.

ரூபியை கைது செய்த போலீசார், இந்த சம்பவத்தில் வேறு யாராவது உடந்தையாக இருந்தார்களா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
