பிக்பாஸ் கவினின் தாயார் ராஜலக்ஷ்மி 1998-ம் ஆண்டு முதல் 2006 -ம் ஆண்டு வரை எந்த வித அனுமதியும் பெறாமல் சீட்டு கம்பெனி நடத்தி வந்துள்ளனர்.
இந்த சீட்டு கம்பெனியில் 34 நபர்கள் சீட்டு கட்டி வந்துள்ளனர். இவர்கள் யாருக்கும் பணத்தை திருப்பி தரவில்லை எனவும் தங்களுடைய பணம் 32 லட்சத்து 28 ஆயிரம் ரூபாயை தங்களுக்கு பெற்று தர வேண்டும் எனவும் கடந்த 2007 -ம் ஆண்டு திருச்சி பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. குற்றம் சாட்டப்பட்ட சொர்ணராஜன் மற்றும் அருணகிரி ஆகியோர் இறந்த நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, தமயந்தி, ராணி மற்றும் ராஜலட்சுமி ஆகியோருக்கு மோசடி வழக்கில் 5 வருட சிறை தண்டனையும் 1,000 ரூபாய் அபராதமும் சீட்டு நிதியங்கள் சட்டத்தின்படி 2 வருட சிறை தண்டனையும் 2,000 ரூபாய் அபராதமும் என மொத்தம் 7 வருட சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கில் சாட்சி அளித்த 29 பேருக்கு தலா ஒரு லட்சம் என 29 லட்சம் வழங்க வேண்டும் எனவும் திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.
தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் கவினின் தாயார் ராஜலட்சுமி, மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பது தற்போது தெரியவந்துள்ளது.