நடிகை நவ்யா நாயர் தமிழில் அறிமுகமாகிய படம் "அழகிய தீயே". அதன் பின்னர் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி,
பாசக் கிளிகள், மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை உள்பட பல படங்களில்
நடித்தார்.
கடந்த 2001-ம் ஆண்டு நடிகர் திலீப்புக்கு ஜோடியாக மலையாளத்தில் இஷ்டம் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான இவர் அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து மலையாளத்தில் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
இதனை தொடர்ந்து, கடந்த 2010–ல் சந்தோஷ் மேனன் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு சாய்கிருஷ்ணா என்ற மகன் உள்ளார். திருமணத்துக்கு பின்னர் சினிமாவை விட்டு ஒதுங்கியே இருந்தார் நவ்யா நாயர். தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் இவர் கொடுத்துள்ள பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது, எனது முதல் படம் "இஷ்டம்". அந்த படத்தின் இயக்குனர் சிபி எனது போட்டாவை பார்த்து விட்டு ஒரு ஓட்டலுக்கு அழைத்தார். நானும் சென்றேன்,அங்கு என்னுடைய நடிப்பு திறமையை பரிசோதித்தார்.
அதை வீடியோவாக பதிவு செய்தார். இந்த வீடியோவை திலீப் பார்த்தபிறகு என்னை ஹீரோயினாக்க ஒப்புக்கொண்டார். அப்போது மட்டும் அவர் வேண்டாம் என்று அவர் ஒதுக்கி இருந்தால் நான் சினிமாவுக்கே வந்து இருக்க முடியாது.
அதன்பிறகு, படப்பிடிப்பின் முதல் நாள் படத்தின் விளம்பரத்திற்காக போட்டோ ஷூட் எடுத்தனர். அப்போது திலீப் எனது தோளில் கைவைத்தபடி போஸ் கொடுத்தார். உடனே எனக்கு படப்படப்பு ஏற்பட்டது. இதய துடிப்பும் அதிகமானது.
கிராமத்தில் பிறந்து வளர்ந்த என்மீது அறிமுகம் இல்லாத ஆண் கைவைத்ததால் சங்கடத்துக்கு உள்ளானேன். அதை புரிந்துகொண்ட திலீப் பயப்பட வேண்டாம். நாம் இந்த படத்தில் ஒன்றாக பணியாற்ற போகிறோம் என்று தைரியம் சொன்னார். இந்த அனுபவத்தை மறக்கவே முடியாது. என்று கூறியுள்ளார்.



