ஜெய்ப்பூர் : 23 வயது இளம்பெண் ஒருவர் தனது தாயை கொலை செய்ய திட்டமிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எப்படி சிக்கினார். இதன் பின்னணியில் நடந்த கொடூரங்கள் என்ன என்பதை விரிவாக பார்ப்போம்.
ஜெய்ப்பூரின் பிரதாப் நகர் பகுதியில் உள்ள ரவீந்திரா நகரைச் சேர்ந்த 45 வயதான நீரஜ் ஷர்மா, கடந்த ஜூலை 3-ம் தேதி அதிவேகமாக வந்த ஸ்கார்பியோ கார் மோதியதில் உயிரிழந்ததாக முதலில் தகவல் வெளியானது. இதனை சாலை விபத்து என்று கருதி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

இந்நிலையில், உயிரிழந்த நீரஜ் ஷர்மாவின் சகோதரர் ராகேஷ், இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் அளித்தார். அக்காவின் மகள் மற்றும் சில உறவினர்களின் பெயர்களை அவர் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து போலீசார் பல கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், நீரஜ் ஷர்மாவின் மரணம் விபத்து அல்ல, முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சம்பவம் என்பது தெரியவந்தது. குற்றவாளிகள், அவரை குறிவைத்து நபர்களை ஏற்பாடு செய்து, சாலை விபத்து போல் தோன்றச் செய்ய திட்டமிட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
பின்னணி என்ன?
நீரஜ் ஷர்மாவின் கணவர் விஜய் குமார் ஷர்மா சுமார் ஒரு வருடத்துக்கு முன்பு உயிரிழந்தார்.
அவரது மரணத்துக்குப் பிறகு, கருணை அடிப்படையில் நீதிமன்றத்தில் இளநிலை எழுத்தர் பணியை நீரஜ் ஷர்மா பெற்றிருந்தார். வீட்டில் பசு மாடுகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வந்த இவர் கணவரின் அரசு வேலையை ஏற்றுக்கொண்டார்.
ஆனால், இந்த அரசு வேலை வாரிசு அடிப்படையில் தனக்குக் கிடைக்க வேண்டும் என நீரஜ் ஷர்மாவின் 23 வயது மகள் ஆயுஷி விரும்பியதாகக் கூறப்படுகிறது.
தந்தை இறந்த பிறகு, அந்த வேலையை தனக்கு வழங்குமாறு தாயிடம் பலமுறை கேட்டதாகவும், தாய் அந்தப் பணியை ஏற்றுக்கொண்டதால் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தப் பிரச்சினையின் காரணமாக, குடும்ப சொத்து மற்றும் அரசு வேலையை கைப்பற்றும் நோக்கில் ஆயுஷி, உறவினர்களுடன் சேர்ந்து திட்டம் தீட்டியதாக போலீசார் கூறியுள்ளனர். அதன்படி, கூலிப்படையினரை ஏற்பாடு செய்து சம்பவத்தை நடத்தியுள்ளனர்.
கைது மற்றும் விசாரணை
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஆயுஷி, அவரது மாமா, உறவினர்கள் உள்ளிட்ட மொத்தம் ஏழு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் ஒரு சந்தேக நபர் தலைமறைவாக உள்ளதால், அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் ஜெய்ப்பூர் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
English Summary : In Jaipur, Rajasthan, a 23-year-old woman allegedly conspired with relatives to target her 45-year-old mother over a compassionate government job and family property. The incident, initially reported as a road accident involving a Scorpio car, was later found to be a pre-planned event. Police have arrested seven individuals, including the daughter, with one more under search. Investigation continues.