சென்னை கூவம் ஆற்றில் இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம், ஆந்திர அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.
நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியின் காளஹஸ்தி தொகுதி பொறுப்பாளரான வினுதா கோட்டா மற்றும் அவரது கணவர் சந்திரபாபு உள்ளிட்டோர், 22 வயது இளைஞரான ஸ்ரீனிவாசலுவை கொடூரமாக சித்திரவதை செய்து கொலை செய்து, சென்னை பேசன் பாலத்தில் உள்ள கூவம் ஆற்றில் சடலத்தை வீசியதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலையின் பின்னணி: அரசியல் மோதல் மற்றும் துரோகம்
ஸ்ரீனிவாசலு, 2019 முதல் வினுதா கோட்டாவின் வீட்டில் கார் ஓட்டுநராகவும், உதவியாளராகவும் பணியாற்றி வந்தவர். அவரை மகனைப் போல வளர்த்ததாக கூறப்படும் வினுதா, அவரை மிகவும் நம்பியிருந்தார்.
ஆனால், 2023 ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில், காளஹஸ்தி தொகுதியை வினுதாவுக்கு வழங்காமல், தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த பஜாலா சுதீர் ரெட்டிக்கு ஒதுக்கப்பட்டது.
இதனால், இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சுதீர், வினுதாவின் அரசியல் செல்வாக்கைக் குறைக்க, ஸ்ரீனிவாசலுவை 30 லட்சம் ரூபாய் கொடுத்து வளைத்து, அவரது ரகசிய தகவல்களை சேகரிக்க உளவு பார்க்கச் செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
படுக்கை அறையில் ரகசிய கேமரா: அதிர்ச்சி தகவல்கள்
ஸ்ரீனிவாசலு, வினுதாவின் படுக்கை அறையில் செல்போனை மறைத்து வைத்து, அவரது அந்தரங்க வீடியோக்களை பதிவு செய்து, சுதீர் ரெட்டிக்கு அனுப்பியதாக வினுதா கண்டறிந்தார்.
பெங்களூரு சைபர் ஆய்வகத்தில் செல்போனை பரிசோதித்தபோது, 100-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் மற்றும் வினுதாவின் அரசியல் நகர்வுகள் குறித்த தகவல்கள் கசிந்தது தெரியவந்தது.
இதனால் ஆத்திரமடைந்த வினுதா மற்றும் அவரது கணவர் சந்திரபாபு, ஸ்ரீனிவாசலுவை அறையில் அடைத்து, சிசிடிவி கேமரா பொருத்தி வைத்து சித்திரவதை செய்தனர்.
சுதீருக்கு எதிரான ஆதாரங்களை சேகரிக்க முயன்ற இவர்கள், சித்திரவதையின் போது ஸ்ரீனிவாசலு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், பின்னர் சந்திரபாபு அவரை கழுத்தை நெறித்து கொன்றதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
உடல் அப்புறப்படுத்தல்: சென்னையில் கொடூரம்
கொலைக்குப் பின், உடலை அப்புறப்படுத்துவதற்காக ஆந்திர பதிவு எண் கொண்ட காரில் ஸ்ரீனிவாசலுவின் உடலை வைத்து சென்னைக்கு கொண்டு வந்தனர்.
வழியில் கார் பழுதானதால், தமிழ்நாடு பதிவு எண் கொண்ட மற்றொரு காரில் உடலை மாற்றி, கூவம் ஆற்றில் வீசியதாக வினுதா வாக்குமூலம் அளித்துள்ளார். ஸ்ரீனிவாசலுவின் கையில் இருந்த “வினுதா கோட்டா” என்ற டாட்டூவை வைத்து, சென்னை ஏழு கிணறு காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர்.
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, வினுதா, சந்திரபாபு, சிவகுமார், ஷேக் தாசன், கோபி ஆகியோரை கைது செய்தனர்.
அரசியல் பரபரப்பு: வினுதாவின் ஆவேச பேச்சு
கைதான வினுதா கோட்டா, இந்தக் கொலைக்கு அரசியல் சதி காரணம் எனவும், தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை எனவும் கூறியுள்ளார். “சிறையில் இருந்து வந்த பிறகு, என்னை இந்த வழக்கில் சிக்க வைத்தவர்களை பார்த்துக் கொள்வேன்,” என்று ஆவேசமாக கூறியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து, ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண், தெலுங்கு தேசம் கட்சித் தலைவரிடம் பேச்சு நடத்தி வருவதாகவும், பொறுமையாக இருக்குமாறு வினுதாவுக்கு அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விசாரணை தொடர்கிறது
இந்த வழக்கில் மேலும் ஆதாரங்களை திரட்டுவதற்காக, சென்னை ஏழு கிணறு காவல்துறையினர், வினுதா மற்றும் சந்திரபாபுவை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
இதற்காக ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவுள்ளனர். ஸ்ரீனிவாசலுவின் செல்போனை இன்னும் கைப்பற்றவில்லை என்பதால், விசாரணை தீவிரமாக நடைபெறுகிறது.
மேஜிஸ்ட்ரேட் உத்தரவின்படி, குற்றவாளிகள் 27 ஆம் தேதி வரை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தக் கொலை வழக்கு, ஆந்திர அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Summary in English : A 22-year-old aide, Srinivasulu, was tortured and murdered by Janasena leader Vinutha Kota and others in Andhra Pradesh. Betraying Vinutha, he secretly recorded her for rival MLA Suthir Reddy. The body was dumped in Chennai’s Cooum River, sparking a political storm.

