திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த 34 வயது சிவபாலாஜி என்பவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
நத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றி வந்த அவர், கடந்த சில நாட்களுக்கு முன் நத்தம் பகுதியில் நடந்த சம்பவத்தில் உயிரிழந்தார். ஆரம்பத்தில் விபத்து போலத் தோன்றிய இந்த சம்பவம், காவல்துறை ஆழமான விசாரணைக்குப் பிறகு முற்றிலும் வேறுபட்ட உண்மையை வெளிப்படுத்தியுள்ளது.
சிவபாலாஜியின் மனைவி ஷண்முகபிரியா. அவருக்கு 28 வயது. இத்தம்பதியருக்கு நான்கு வயது ஆண் குழந்தை உள்ளது. சிவபாலாஜியின் தாயார் பூங்கோதை. சிறு வயதிலேயே கணவனை இழந்த பூங்கோதை, தனது ஒரே மகன் சிவபாலாஜியை வளர்ப்பதற்காக வீட்டு வேலைகளுக்குச் சென்று கடுமையாக உழைத்தார்.

மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் படிக்க வைத்து, அரசுப் பணிக்குத் தயாராகும்படி ஊக்கப்படுத்தினார். மூன்று ஆண்டுகள் கடுமையாக உழைத்து, சிவபாலாஜிக்கு நத்தம் யூனியன் அலுவலகத்தில் பணி கிடைத்தது.
பணி கிடைத்த பிறகு சிவபாலாஜி திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்தபோது, தாய் பூங்கோதை “முதலில் சொந்த வீடு கட்டிவிட்டுப் பிறகு திருமணம் செய்யலாம்” என்று கூறினார்.
ஆனால் ஒரு புரோக்கர் மூலம் ஷண்முகபிரியாவின் புகைப்படத்தைப் பார்த்த சிவபாலாஜி அவரை விரும்பினார். அரசு வேலை மாப்பிள்ளை, விட்டுவிடக்கூடாது என ஷண்முகப்பிரியாவின் பெற்றோர்கள் அவசர அவசரமாக சிவபாலஜிக்கு தங்களுடைய மகளை திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்கு ஒரு மாதத்திற்குள்ளேயே ஷண்முகபிரியா கர்ப்பமானார்.
ஆனால் அதற்குப் பிறகு ஷண்முகபிரியா மாமியாருடன் இருக்க முடியாது எனச் சொல்லி தனது அம்மா வீட்டிற்குச் சென்றுவிட்டார். சிவபாலாஜி அடிக்கடி அம்மா வீட்டிற்குச் சென்று மனைவியைச் சந்தித்து வந்தார்.
ஷண்முகபிரியா தனது சம்பளத்தை முழுவதும் வாங்கத் தொடங்கியதால், பூங்கோதைக்கு எந்த உதவியும் கிடைக்காமல் போனது. இருந்தாலும் பூங்கோதை தனது மகனின் மகிழ்ச்சிக்காக அதைப் பொறுத்துக்கொண்டார்.
குழந்தையின் பிறப்பிற்குப் பிறகும் ஷண்முகபிரியா மாமியாருடன் இணைந்து வாழ மறுத்தார். சிவபாலாஜியின் தாயார், மகனின் குடும்ப வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காக, தானே தனியாக இருக்க முன்வந்து, மகனையும் மருமகளையும் தனியாக வாழச் சொன்னார்.
அதன்பிறகு சிவபாலாஜி தனியாக வீடு எடுத்து குடும்பத்துடன் வசிக்கத் தொடங்கினார். பூங்கோதை அவ்வப்போது பேரனைப் பார்க்க வந்து செல்வார். ஒருமுறை தனது சேமிப்பில் இருந்து மருமகளுக்கு ஒரு செயின் வாங்கிக் கொடுத்தார்.

சில மாதங்களுக்குப் பிறகு ஷண்முகபிரியாவின் அம்மாவும் அந்த வீட்டில் தங்கத் தொடங்கினார். பூங்கோதை இதைக் கண்டு அமைதியாக இருந்தார். ஆனால் ஒருநாள் தான் வாங்கிக் கொடுத்த செயினை ஷண்முகபிரியாவின் அம்மா அணிந்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதனால் மாமியார்-மருமகள் இடையே பிரச்சனை ஏற்பட்டது.
ஷண்முகபிரியா மாமியாரிடம் “இனி இந்த வீட்டுப் பக்கம் வரக்கூடாது” என எச்சரித்தார். இதனால் சிவபாலாஜி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். வீட்டிற்குச் செல்ல விரும்பாமல் அலுவலகத்திலேயே தங்கத் தொடங்கினார். மனம் சரியில்லாத நேரங்களில் தனது சித்தப்பாவின் மகன் யுவராஜ் கடைக்குச் சென்று பேசி ஆறுதல் பெற்று வந்தார்.

இந்த நிலையில் ஒருநாள் பூங்கோதைக்கு போன் வந்தது. “உங்கள் மகன் விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் இருக்கிறார். உடனே வாருங்கள்” என அழைத்தனர். பூங்கோதையும் யுவராஜும் விரைந்து அந்த இடத்திற்குச் சென்றபோது, சிவபாலாஜி தலையில் கடுமையான காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்தார்.
போலீசார் ஆரம்பத்தில் வாகன விபத்து எனக் கருதினர். ஆனால் பூங்கோதையும் யுவராஜும் இது திட்டமிட்ட செயல் எனக் கூறி புகார் அளித்தனர். உடனே உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

விசாரணை தொடங்கிய சில மணி நேரத்திலேயே பாண்டி மற்றும் விக்னேஷ் என்ற இருவர் நத்தம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். பாண்டி, “எனக்கும் சிவபாலாஜிக்கும் பணப் பரிவர்த்தனை தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அந்தக் கோபத்தில் நான் அவரைத் தாக்கி உயிரிழக்கச் செய்தேன்” என வாக்குமூலம் அளித்தார்.
ஆனால் பூங்கோதை இதை ஏற்கவில்லை. பாண்டி சிவபாலாஜியின் நெருங்கிய நண்பன். அடிக்கடி வீட்டிற்கு வந்து செல்பவர். “இவர்களுக்குள் பணப் பிரச்சனை இருக்க வாய்ப்பில்லை. வேறு ஏதோ மறைக்கப்படுகிறது” என போலீசாரிடம் அழுத்தம் கொடுத்தார்.

அதே நேரத்தில் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் யுவராஜிடம் முக்கியமான தகவலைச் சொன்னார். “உன் அண்ணன் வீட்டில் இல்லாத நேரங்களில் பாண்டி அடிக்கடி வந்து நீண்ட நேரம் இருந்து செல்வான். உன் அண்ணனும் மூன்று மாதமாக வீட்டுப் பக்கம் வரவில்லை. இவர்களின் நடத்தையில் சந்தேகம் இருக்கிறது” எனக் கூறினார்.
இதையடுத்து நடத்தப்பட்ட ஆழமான விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. பாண்டி சிவபாலாஜியிடம் சுமார் ஏழு லட்சம் ரூபாய் வரை பண உதவி பெற்றிருந்தார்.

நண்பன் என்ற நம்பிக்கையில் சிவபாலாஜி உதவி செய்திருந்தார். அதே நேரத்தில் பாண்டிக்கும் ஷண்முகபிரியாவுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டிருந்தது. சிவபாலாஜி வீட்டில் இல்லாத நேரங்களில் பாண்டி வீட்டிற்கு வந்து செல்வது வழக்கமாகிவிட்டது.
இதைப் பக்கத்து வீட்டாரின் சந்தேகத்தால் அறிந்த சிவபாலாஜி, பாண்டியைக் கடுமையாகக் கண்டித்தார். பாண்டி மன்னிப்புக் கேட்டு, இனி வீட்டுப் பக்கம் வரமாட்டேன் எனச் சொல்லிவிட்டார். சிவபாலாஜி இதை மறந்து நிம்மதியாக வாழ முயன்றார்.

ஆனால் ஷண்முகபிரியா இதை ஏற்க முடியவில்லை. தனது கணவன் கள்ளக்காதலன் பாண்டிக்கும் தனக்கும் இடையே தடையாக இருக்கிறார் என்ற எண்ணம் அவருக்குள் வளர்ந்தது. இதனால் இருவருக்கும் இடையே கடுமையான சண்டைகள் தொடர்ந்தன. உறவினர்கள் கணவன்-மனைவி பிரச்சனை என நினைத்து சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் உண்மை அவர்களுக்குத் தெரியாது.
சம்பவம் நடந்த அன்று விடியற்காலை நான்கு மணியளவில் பாண்டியும் விக்னேஷும் சிவபாலாஜியின் வீட்டிற்கு வந்து கதவைத் தட்டினர். “எல்லோரும் சேர்ந்து பேசிக்கொண்டு வருவோம்” என அழைத்தனர்.

நம்பிச் சென்ற சிவபாலாஜியுடன் அவர்கள் மது அருந்தினர். பிறகு தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. சிவபாலாஜி “எனக்கு மனம் சரியில்லை. வீட்டுக்குப் போகிறேன்” எனச் சொல்லி பைக் எடுத்துச் சென்றார்.
அப்போது பாண்டி தனது காரை வேகமாக ஓட்டி சிவபாலாஜியின் பைக்கை மோதினார். கீழே விழுந்த சிவபாலாஜியை பாண்டியும் விக்னேஷும் அங்கிருந்த பெரிய கற்களால் தலையில் பலமுறை தாக்கினர். பின்னர் இதை விபத்து போல காட்டினர்.

மனைவி ஷண்முகபிரியா போலீசாரிடம் “காலையில் பால் வாங்கச் சென்றார். அதற்குப் பிறகு என்ன ஆனது எனத் தெரியவில்லை” எனக் கூறினார். ஆனால் விசாரணையில், கணவனின் அரசுப் பணியை மனைவி என்ற முறையில் தனக்கு கிடைக்கும் படி ஏற்பாடு செய்து கொண்டு பாண்டியை திருமணம் செய்து நிரந்தரமாக வாழும் நோக்கில் ஷண்முகபிரியாவே இந்தத் திட்டத்தைத் தீட்டிச் செயல்படுத்தியது தெரியவந்தது.
போலீசார் ஷண்முகபிரியா, பாண்டி, விக்னேஷ் ஆகியோரைக் கைது செய்து, வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்தச் சம்பவம் நத்தம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவன் மீது கொண்டிருந்த நம்பிக்கையும், நண்பன் மீது வைத்திருந்த நம்பிக்கையும் எப்படி உடைந்தது என்பதை அப்பகுதி மக்கள் இன்னும் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றனர்.
Summary in English : In Natham near Dindigul, 34-year-old government staffer Sivabalaji lost his life in an incident that initially appeared accidental. Police probe later showed his wife Shanmuga Priya and close friend Pandi, with another man, planned the act after personal issues and a secret relationship. The accused were arrested, shocking the locality.
