நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி வெளிவந்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் இரண்டாவது வாரமாக வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
வெளியாகி பத்து நாட்களை நிறைவு செய்துள்ள இந்த திரைப்படத்தின் ஒட்டு மொத்த வசூல் நூற்று இருபது கோடியை தாண்டியுள்ள நிலையில் கடந்த ஏழு மாதத்தில் மட்டும் முன்னூறு கோடி ரூபாய் வர்த்தகத்தை அஜித் தனி ஆளாக நிகழ்த்தியுள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் அஜித் நடிப்பில் விஸ்வாசம் திரைப்படம் வெளியானது. போட்டிக்கு அதே தினத்தில் நடிகர் ரஜினிகாந்த் - கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் உருவான பேட்ட திரைப்படம் வெளியாகி இருந்தாலும் விஸ்வாசம் திரைப்படத்தின் வர்த்தகத்தில் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை.
உலகம் முழுவதும் சுமார் நூற்று எண்பது கோடி ரூபாயை வாரி சுருட்டியது இந்த திரைப்படம். ஆனால், தமிழகத்தில் பேட்ட திரைப்படத்தை காட்டிலும் அதிக வசூலை ஈட்டிய விஸ்வாசம் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் வசூலித்த தொகை 135 கோடி ரூபாய் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.
இதனை வைத்து பார்க்கும்போது தமிழகத்தில் மட்டும் கடந்த ஏழு மாத இடைவெளியில் அஜித் திரைப்படங்கள் 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. இது அஜித் ரசிகர்களை மேலும் உற்சாகம் அடைய செய்துள்ளது.
Tags
Nerkonda Paarvai