தென்னிந்தியாவில் பிரபல நடிகை சாய் பல்லவி, வளர்ந்து வரும் நடிகையாக பல்வேறு படங்களில் ஒப்பந்தம் ஆகி நடித்துக் கொண்டிருக்கிறார். மலையாளப் படத்தில் அறிமுகமானாலும், இவருடைய அழகிய முகம், சிரிப்பு, நடனத்திற்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு.
மருத்துவப் படிப்பை முடித்து விட்டு, சினிமா மீதான தீராத காதலால் நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவருக்கு விளம்பரம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது.
ஆனால் அவர் நடிக்க மறுத்துவிட்டார். உடனே அந்நிறுவனம் ரூ.4 கோடி வரை தரத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தது. ஆனால் அதையும் சாய் பல்லவி மறுத்துவிட்டார்.
அப்படியென்ன விளம்பரம் என்றால் அழகை மேம்படுத்தும் கிரீம் சம்பந்தப்பட்டது. இதை தடவிக் கொண்டால் வெளிநாட்டவர்கள் போல, நாம் வெள்ளையாக மாறிவிடலாம் என்கின்றனர்.
இதுகுறித்து விளக்கமளித்த சாய் பல்லவி, ‘இந்தியர்கள் நிறம் இது தான், நாம் ஏன் வெளிநாட்டவர்களை போல் மாற வேண்டும். இந்தியர்களாக இயல்பாகவே இருக்கலாம். எப்போதும் சிவப்பழகு கிரீம் விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்’ என்று கூறியுள்ளார்.
ஆனால், அதே விளம்பரத்தை வெறும் 50 லட்சம் சம்பளமாக வாங்கி கொண்டு நடித்து கொடுத்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

