சித்ராவின் தற்கொலைக்கு ஹேமந்த்துதான் காரணம் என்று சித்ராவின் தாயார் முன்னதாக குற்றம் சாட்டினார். அதற்கு பிறகு சித்ரா தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு தாயிடம் வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது.
ஆனால், ஹேமந்த்திடம் 6 நாட்களாக விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் பல மர்மங்கள் வெளிவந்துள்ளன.சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9 ஆம் தேதி நசரத்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த வழக்கை நசரத்பேட்டை போலீசார் மற்றும் வருவாய் துறையினர் விசாரித்து வரும் நிலையில் நேற்றிரவு சித்ராவின் காதல் கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து 6 நாட்களாக நடந்து வந்த விசாரணையில் சித்ராவின் மரணம் குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
சொகுசு வாழக்கை - கூடிய கடன்
அதாவது, சின்னத்திரையில் நடித்து வந்த சித்ரா தொழிலதிபர் ஹேமந்தை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், சொகுசு கார், திருவான்மியூரில் சொந்த வீடு என ஆடம்பரத்தை ஏற்படுத்திக்கொள்வதற்காக சித்ரா பல இடங்களில் கடன்கள் வாங்கியதாக கூறப்படுகிறது.
பதிவு திருமணம்
இதனால் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய சித்ரா தனது குடும்பத்தையும் கவனிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார். இதற்கிடையே, சித்ராவின் காதலைக்கூட அவரது தாயார் அரை மனதாகத்தான் ஏற்றுக்கொண்டார். இருவரும் அடிக்கடி வெளியில் சென்று வருவதால் உடனே திருமணம் செய்து வைக்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.
முதலில் ஜனவரியில் திருமணத்தை ஏற்பாடு செய்ய திட்டமிட்டு, பின்னர் விரைவாக நடத்திவிட எண்ணி இருவருக்கும் பதிவு திருமணம் நடந்துள்ளது. ஆனால், திருமணத்தின் செலவுகள் அனைத்தையும் சித்ராவே பார்த்து வந்துள்ளார்.
திருமணத்தில் ஹேமந்த்துக்கு உடன்பாடில்லை என்பதை போல தனது சார்பில் அவர் செலவுகளை செய்யவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையில், ஹேமந்த்துக்கு சித்ரா மீது சந்தேகம் எழ தொடங்கியது. படப்பிடிப்பில் யாருடன் நடனமாடுகிறாய்? ஆண்களுடன் நெருக்கமான காட்சிகளில் எதற்கு நடிக்கிறாய் என அடிக்கடி வெறுப்பு பேச்சுக்களை பேசி வந்த ஹேமந்த் ஒரு கட்டத்தில் நீ இனி நடிக்கவே கூடாது என்று கூறியுள்ளார்.
விவாகரத்து வேண்டும்
சம்பவம் நடந்த டிசம்பர் 9 ஆம் தேதி இரவும் ஹேமந்த் இந்த விவகாரத்தை கேட்டுத்தான் சண்டையிட்டுள்ளார். அப்போது, மனமுடைந்து அழுத சித்ரா, ''என்னை விட்டு விடாதே, நான் உன்னையே நம்பியுள்ளேன்'' என்று கூறவே, 'செத்து தொலை' என்று திட்டி விட்டதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து தான் ஹேமந்த் மீது முதற்கட்டமாக தற்கொலைக்கு தூண்டுதல் வழக்கை பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
திடுக் தகவல்
இந்நிலையில், விசாரணையில் சித்ரா தற்கொலைக்கு முயற்சி செய்தது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே ஒரு முறை தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அப்போது, காப்பாற்றி விட்டோம் என்று கூறியுள்ளார். இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.