செங்கல்பட்டு, மார்ச் 20, 2026 : செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அருகே உள்ள மடையம்பாக்கம் கிராமத்தில் இருளர் சமூகத்தைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் பள்ளிக்குச் செல்லும் வழியில் பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன்தினம் காலை பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த அச்சிறுமியை, திமுக கிளைக்கழக பொறுப்பில் உள்ள சிவா என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி ஏற்றிச் சென்றுள்ளார். பாதி வழியில் வாகனத்தை நிறுத்திய சிவா, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

அச்சமடைந்த சிறுமி, நடந்த சம்பவத்தை தோழிகள் மற்றும் உயர் வகுப்பு மாணவிகளிடம் தெரிவித்துள்ளார்.
அவர்கள் குழந்தைகள் உதவி எண்ணுக்கு (Childline) தகவல் அளிக்கச் சொன்ன நிலையில், சிறுமி பள்ளி தலைமை ஆசிரியரிடம் முறையிட்டுள்ளார். தலைமை ஆசிரியர் உடனடியாக பெற்றோரிடம் தெரிவிக்குமாறு அறிவுறுத்தியதையடுத்து, சிறுமி தனது குடும்பத்தினரிடம் விவரித்துள்ளார்.
இதனிடையே, அப்பகுதியைச் சேர்ந்த வேலு என்பவர் சிறுமியிடம் நடந்ததை விசாரித்து, அதனை வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
இதையடுத்து, சிறுமியின் குடும்பத்தினர் மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால், இதுவரை முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், வீடியோ வெளியிட்ட வேலு என்பவரை திமுகவைச் சேர்ந்த சிலர் மிரட்டியதாகவும், காவல்துறை தேடி வருவதால் அவர் தலைமறைவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள இருளர் பழங்குடியினர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள், சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆபத்து ஏற்படலாம் என முன்னெச்சரிக்கையாக அவர்களை காஞ்சிபுரத்திற்கு அழைத்துச் சென்று பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். காவல்துறை உடனடியாக வழக்கு பதிவு செய்து, குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
Summary : In Chengalpattu district near Seyyur, a Class 6 girl from the Irular community was allegedly harassed by a local DMK functionary named Siva while being taken to school on his two-wheeler. The family filed a complaint at Melmaruvathur All Women Police Station, but no FIR has been registered yet. The girl and family are now in safe custody.

