ஒருத்தர்.. ரெண்டு பேர் இல்ல..30 பேர்.. காவல்துறையும் உடந்தை.. கொலையான ஜாகிர் உசேன் பதபதவைக்கும் வீடியோ..!


நெல்லையில் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கொலை செய்யப்படுவதற்கு முன்பு ஜாகிர் உசேன் பதிவு செய்த வீடியோவில், தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், மிரட்டல் விடுபவர்களின் பெயர்களுடன், அதற்கு உறுதுணையாக உள்ள சில காவல்துறை அதிகாரிகளின் பெயரையும் குறிப்பிட்டிருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், தைக்கா தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன் (வயது 60). காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். 

இவர் தன் வீடு அருகே உள்ள மசூதிக்கு தொழுகைக்காக பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர்கள் ஜாகிர் உசேனை ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.

இந்த கொலை சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அக்பர்ஷா, கார்த்திக் என்ற இருவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். 

இதில் தௌஃபிக் என்பவரின் பெயர் அடிபட்டாலும், அவரது பின்னணியில் சில காவல்துறை அதிகாரிகளும் இருப்பதாக ஜாகிர் உசேன் குடும்பத்தினர் புகார் வைத்துள்ளனர்.

கொலைக்கு முன்பு ஜாகிர் உசேன் வெளியிட்ட வீடியோ


கொலை செய்யப்படுவதற்கு முன்பு ஜாகிர் உசேன் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர், "மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருக்கு வணக்கம். தமிழ்நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்களில் ஒருவராக ஒரு மூலையில் நானும் இருக்கிறேன். 

என்னால் முடிந்த நல்லறங்களை செய்து கொண்டிருக்கிறேன். மரணிக்கும் நேரத்தில் நல்ல காரியம் செய்வதற்காக திருநெல்வேலி டவுன், தொட்டிப்பாளையம் தெருவில் இருந்து நன்மையான பல காரியங்களை செய்து கொண்டிருக்கிறேன். 

இதை நான் சொல்ல வேண்டாம். அந்தப் பகுதியில் வக்பு இடத்துக்கு பாத்தியப்படாதவர்களை கேட்டால் அந்த மக்களே சொல்வார்கள். நான் சொல்லிதான் தெரிய வேண்டும் என்பதல்ல. விசாரணை செய்யுங்கள். விசாரிக்க எல்லாம் செய்ய மாட்டீர்கள். 

அதற்கெல்லாம் உங்களுக்கு நேரம் இல்லை. ஒருவர்.. இருவர் இல்லை.. ஒரு கும்பலே சேர்ந்து எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறது. என்னை கொலை செய்ய 20-30 பேர் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். 

அதில் முக்கியமான நபர் தெளஃபிக். இந்த கொலைக்கு மிக முக்கிய காரணம் திருநெல்வேலி டவுன் காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், உதவி ஆணையாளர் செந்தில் குமார் ஆகிய இருவரும் தான் இந்த கொலையை ஊக்குவிக்கிறார்கள். 

நான் கொடுக்கும் புகார்களை எல்லாம் ஒன்று சேர்ப்பதே இந்த இரண்டு பேர் தான். தௌஃபிக் என்பவர் தன் பெயரை கிருஷ்ணமூர்த்தி என்று சொல்லி சிவில் பிரச்னையில் என் மீது போலி புகார் அளித்தார். 

அந்தப் புகாரின் அடிப்படையில் என் மீதும், என் மனைவி மீதும் பிசிஆர் வழக்கு போட்டுள்ளனர். இப்போது எனக்கு கொலை மிரட்டல், பயந்து ஓடி கொண்டிருக்கிறேன். சாகப் போகிற நான் என்ன வேண்டுமானாலும் பேசலாம். எப்படியும் கொன்றுவிடுவார்கள் என்று தெரியும்." என்று கூறியுள்ளார்.

வைரலாகும் வீடியோ, பாதுகாப்பு கேள்விக்குறி


இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனக்கு கொலை மிரட்டல் இருக்கிறது என்று பெயர்களுடன் வீடியோ வெளியிட்டும் ஜாகிர் உசேனுக்கு பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதே போல புதுக்கோட்டை மாவட்டத்தில் கல் குவாரிக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜபகர் அலி கடந்த ஜனவரி மாதம் படுகொலை செய்யப்பட்டார். அவரது கொலையிலும் சில அரசு அதிகாரிகள் கொலை செய்த குற்றவாளிகளுக்கு உதவியாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது. 

அந்த அதிர்ச்சியே அடங்காத நிலையில் தற்போது அதே பாணியில் மற்றொரு கொலை நடந்துள்ளது.

இந்த சம்பவத்தில் திமுக அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். ஜாகிர் உசேன் கொலைக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இது போன்ற சம்பவங்கள் தொடராமல் தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். 

இந்த படுகொலை சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

Previous Post Next Post
--Advertisement--