உத்தர பிரதேச மாநிலம், கனோஜ் மாவட்டம், பகதூர்பூர் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற இராணுவ வீரர் தேவேந்திர குமார், தனது மனைவி மாயா தேவியால் (50) கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேவேந்திர குமார், பார்டர் ரோட்ஸ் ஆர்கனைசேஷன் (BRO) பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில், மகளை பீகாரின் பக்சர் ரயில் நிலையத்தில் இருந்து அழைத்து வர புறப்பட்டதாகவும், அவர் திரும்பவில்லை எனவும் மாயா தேவி மே 10, 2025 அன்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரைத் தொடர்ந்து, காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். தேவேந்திர குமாரின் செல்போன் முடக்கப்பட்டிருந்ததால், சந்தேகமடைந்த அதிகாரிகள் மாயா தேவியிடம் விசாரணை நடத்தினர்.
அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், கிடுக்குப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. இதில், மாயா தேவி தனது கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவருக்கும் அனில் யாதவ் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், கணவர் இதற்கு இடையூறாக இருந்ததால் கொலை செய்யத் திட்டமிட்டதாகவும் தெரிவித்தார்.
மாயா தேவியும், அனில் யாதவும் சேர்ந்து தேவேந்திர குமாரை கொலை செய்து, உடலை 6 துண்டுகளாக வெட்டி, காகரா ஆற்றங்கரையில் வீசினர். இதை மறைக்க, மாயா தேவி பொய்யாக புகார் அளித்தார். விசாரணையில், மே 10 அன்று கரீட் கிராமத்தில் துண்டிக்கப்பட்ட கைகால் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இரண்டு நாட்களுக்குப் பிறகு, அருகிலுள்ள கிணற்றில் உடலின் மற்ற பகுதிகள் கிடைத்தன. ஆனால், கொலைசெய்யப்பட்ட கணவரின் தலை மற்றும் மர்ம உறுப்பு இன்னும் கிடைக்காததால், தேடுதல் வேட்டை தீவிரமாக நடைபெறுகிறது.
அடையாளம் தெரிய கூடாது என்பதற்காக தலையை சிதைத்து விட்டார்களா என்ற கோணத்திலும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
காவல்துறையினர் மாயா தேவி, அனில் யாதவ், மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த சதீஷ் யாதவ், ஓட்டுநர் மிதிலேஷ் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.
அனில் யாதவ், காவல்துறையுடனான மோதலில் காலில் குண்டடிபட்டு பிடிபட்டார். இந்த கொலை, மாயாவின் கள்ளக்காதலால் திட்டமிடப்பட்டது என்பது விசாரணையில் உறுதியானது.
சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது, பெண்களுக்கு எதிராக மட்டுமின்றி, ஆண்களுக்கும் குடும்பத்தில் நேரும் அநீதியை வெளிப்படுத்துகிறது.
சமூகத்தில் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட உறவுகள், துரோகத்தாலும், சிற்றின்ப தேடலில் சின்னபின்னமான சிந்தனையாலும், சிதைவது வேதனையளிக்கிறது.
இதுபோன்ற சம்பவங்கள், சட்ட அமலாக்கம் மற்றும் சமூக விழிப்புணர்வின் அவசியத்தை வலியுறுத்துகின்றன. தேவேந்திர குமாரின் கொடூர மரணம், நீதியை விரைவாக நிலைநாட்ட வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.