ஹைதராபாத்தில் 23 வயதான ஐந்து மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர், தன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு DNA பரிசோதனை செய்ய வேண்டும் என்ற கணவரின் கோரிக்கையால் ஏற்பட்ட மன உளைச்சல் தாங்காமல் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சனிக்கிழமையன்று பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் அபிலாஷ் மற்றும் அவரது தாயார் லட்சுமி ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுஷ்மிதா என்ற அந்தப் பெண், ஜூன் 25-ஆம் தேதி மாலை மேடக் மாவட்டம், அல்லாதுர்க் மண்டலம், கடிபெத்தபூர் கிராமத்தில் உள்ள தனது இல்லத்தில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
சுஷ்மிதா விகாராபாத் மாவட்டம் மோத்குபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர். கடிபெத்தபூரைச் சேர்ந்த வளையல் விற்பனையாளர் அபிலாஷுடன் சுமார் 18 மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆனது.
குடும்பத்தினர் அளித்த புகார்:
சுஷ்மிதாவின் தாயார் ஜனபாய் அளித்த புகாரில், “ஜூன் 23-ஆம் தேதி வளைகாப்பு விழா ஏற்பாடுகள் குறித்து பேசுவதற்காக நாங்கள் சுஷ்மிதாவின் வீட்டுக்கு சென்றோம். அப்போது அபிலாஷ் வாக்குவாதம் செய்து, பிறக்காத குழந்தைக்கு DNA பரிசோதனை செய்ய வேண்டும் என்று கோரினார்.
எப்படி எடுப்பது எனக் கேட்டபோது, அந்த உறுப்புக்குள் கையை விட்டு... என மிகவும் கொடூரமான வகையில் பேசினார். வீட்டுப் பெரியவர்கள் தலையிட்டதால் நாங்கள் திரும்பி வந்தோம். இந்தச் சம்பவம் சுஷ்மிதாவுக்கு பெரும் அவமானத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியது” என்று குற்றம் சாட்டினார்.
மேலும், அபிலாஷ் தொடர்ந்து உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தி வந்ததாகவும், இந்தச் சம்பவம் தான் தன் மகள் இந்த முடிவை எடுக்கக் காரணம் என்றும் ஜனபாய் தெரிவித்தார்.
காவல்துறை நடவடிக்கை:
அல்லாதுர்க் உதவி ஆய்வாளர் டி. சங்கர் கூறுகையில், “அபிலாஷ் மற்றும் அவரது தாயார் லட்சுமி ஆகியோர் கைது செய்யப்பட்டு, நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் அனுப்பப்பட்டுள்ளனர்” என்றார். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு சுஷ்மிதாவின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் பிரசவத்துக்காகக் காத்திருக்கும் பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் மற்றும் குடும்பப் பிரச்னைகள் குறித்து மீண்டும் விவாதத்தை எழுப்பியுள்ளது. கர்ப்பிணிகளின் மனநலனைப் பாதுகாக்க குடும்பங்கள் மற்றும் சமூகம் மேலும் உணர்வுடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தை இந்தச் சம்பவம் நினைவூட்டுகிறது.
English Summary : A 23-year-old pregnant woman named Sushmitha passed away in Medak district, Hyderabad. Her husband Abhilash reportedly demanded a DNA test for the unborn child during a family discussion, causing her deep distress. Following a complaint from her mother, police arrested Abhilash and his mother Lakshmi. The case has shocked the local community.