விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்ற இவர், தனுஷ், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து, தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர்.
ஆனால், சமீபத்தில் இவர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த இக்கட்டான சூழலில், அவருக்கு உறுதுணையாக இருந்தவர்களையும், குறிப்பாக நடிகர் தனுஷின் உதவியையும் ரோபோ சங்கர் ஒரு சமீபத்திய பேட்டியில் உருக்கமாகப் பகிர்ந்து கொண்டார்.
இந்த நிகழ்வு இணையத்தில் பரவலாகப் பேசப்பட்டு, ரசிகர்களின் மனதை நெகிழ வைத்துள்ளது. ரோபோ சங்கர் தனது பேட்டியில், மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, மருத்துவச் செலவுகள் மிகப்பெரிய தொகையாக இருக்கும் என்று அறிந்து திகைத்து நின்றதாகக் கூறினார்.
“என்ன செய்வது என்று தெரியவில்லை. இப்படி ஒரு சூழல் வரும் என்று கனவிலும் நினைத்ததில்லை,” என்று அவர் உருக்கமாகப் பேசினார். அவர் கூறியதில் இருந்து, இந்த நெருக்கடியான தருணத்தில், அவர் முதலில் தொடர்பு கொண்டவர் நடிகர் தனுஷ்.
ஆனால், அவரது தொலைபேசி எண்ணைக் கூட அவசரத்தில் கண்டுபிடிக்க முடியவில்லை. தனுஷ் அப்போது ஒரு ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்காக விமான நிலையத்தில் இருந்தார்.
பல இடங்களில் விசாரித்து, ஒருவழியாக தனுஷின் எண்ணைப் பெற்று, “சார், இப்படி ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டேன். உங்களால் ஏதாவது உதவி செய்ய முடியுமா?” என்று கேட்டார். தனுஷ், “இன்னும் கொஞ்ச நேரத்தில் விமானத்தில் ஏறப்போகிறேன். பத்து நிமிஷத்தில் கூப்பிடுறேன்,” என்று கூறி தொலைபேசியை அணைத்துவிட்டார்.
ஆனால், வெறும் ஐந்து நிமிடங்களில், ரோபோ சங்கர் எதிர்பார்த்ததைவிட பெரிய உதவியை தனுஷ் செய்து கொடுத்தார். தனுஷ் இப்படி பண்ணுவாருன்னு நான் எதிர்பாக்கல.. இந்த உதவியை “என் வாழ்நாளில் மறக்க முடியாது” என்று கண்ணீர் மல்க பேசினார் ரோபோ சங்கர்.
மேலும், இந்த கடினமான காலகட்டத்தில், தனது நண்பர்களையும் உறவினர்களையும் வேண்டுமென்றே தவிர்த்ததாக அவர் கூறினார். “வருபவர்கள் எல்லாம் என்னைப் பார்த்து அழுதனர். ‘நீ மீண்டு வருவியா, என்னவோ தெரியலையே’ என்று புலம்பினர்.
நான் உடல்நலம் தேற முயற்சித்தாலும், அவர்களின் அழுகை எனக்கு பயத்தை ஏற்படுத்தியது. அவர்கள் அழுவதைப் பார்க்க என்னால் முடியவில்லை. அது என் மனதையும் உடலையும் மேலும் பலவீனப்படுத்தியது,” என்று அவர் வேதனையுடன் தெரிவித்தார்.
இதனால், அந்த நேரத்தில் தனது நெருங்கியவர்களை அனுமதிக்காமல் இருந்ததாகவும், அவர்கள் இதைப் புரிந்து கொள்வார்கள் என்று நம்புவதாகவும் கூறினார்.
ரோபோ சங்கரின் இந்த பேட்டி, அவரது உடல்நலப் போராட்டத்தையும், மன உறுதியையும், தனுஷின் பெருந்தன்மையையும் வெளிப்படுத்தியது.